தமிழகத்தின் முத்தைப்பற்றி எழுதவேண்டும் என்று நீண்ட நாளாக எனக்கிருந்த அவா. அதைப் பூர்த்தி செய்துகொள்ள ‘ராஜ முத்திரையை’ எழுதினேன். நான் எழுதிய நாவல்களுக்குச் சரித்திரக் குறிப்புகளைத் தேடியபோதெல்லாம், முத்தின் சிறப்பு கண்முன் தோன்றிக் கொண்டேயிருந்தது. தமிழகத்தின் சரித்திரத்தை எழுதிய ஒவ்வொரு பேராசிரியரும், இந்த நாட்டுக்கு வந்து போன ஒவ்வொரு வெளிநாட்டு வாணிபரும், யாத்ரீகரும் இதைக் குறிப்பிடத் தவறவில்லை . அதுவும் பாண்டியநாடு முத்தால் சிறந்ததென்றும், முத்தால் வளர்ந்ததென்றும் அவர்கள் ஒவ்வொருவரும் குறிப்பிட்டி ருக்கிறார்கள். முத்து எப்படி எடுக்கப்பட்டது, எப்படிப் பாதுகாக்கப்பட்டது, எப்படி உபயோகிக்கப்பட்டது என்பதை மார்க்கோபோலோ, ஏலியன் முதலிய வெளி நாட்டவர் விவரமாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
ஏலியன் முத்து எடுப்பை ஒரு கதை போலச் சொல்கிறார்: “யூக்ரடைடீஸ் ஆண்ட காலத்தில் ஸோரஸ் (சோழர்) என்ற அரச வம்சத்தினர் ஆண்ட ஒரு நகரம் இன்னும் இருக்கிறது. அந்த நகர மக்கள் பெரும் வலைகளை எடுத்துக் கொண்டு, கடலுக்குச் சென்று முத்து எடுப்பார்கள். முத்துச் சிப்பிகள் கூட்டம் கூட்டமாக நீந்தி வருமென்றும், தேனீக்களுக்கு ராணி இருப்பதுபோல, இந்த முத்து வர்க்கத்துக்கும் ஒரு தலைவி இருப்பதாகவும் தெரிகிறது. தலைவியின் சிப்பி மற்ற சிப்பிகளைவிடவும் பெரிதாகவும் அதிக வர்ண ஜாலங்கள் உள்ளதாகவும் இருக்கும்.”
விமர்சனங்கள்
இதுவரை விமர்சனங்கள் எதுவும் இல்லை.