கொம்புகள் முழங்க ;முரசங்கள் அதிர, பறைகள் ஆர்ப்பரிக்க வாட்களுடன் வாட்களும், வேலுடன், வேலும் மோதிக்கொண்டன. விற்கலை வீரர்கள் தத்தம் அம்பறாத் தூணிகளின் பாரத்தைக் குறைத்து எதிர் அணி வீரர்களைச் சாய்க்கத் தொடங்கினர். வேழங்கள் பிளிறிக்கொண்டு முன்னேறின. மத்தகங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிப் பிளந்தன.
அநபாயருடன் ஆக்ரோஷமாகப் போரிட்டான் தளபதி புலிகேசி. ஆனால் அவனது ஆக்ரோஷமும், பராக்கிரமமும் அதிக நேரம் நீடிக்கவில்லை. விநாடிகள் செல்லச் செல்ல வீறுகொண்டெழுந்த வேகம் தடுமாற்றமாக மாறித் தளர்ந்துபோனான் புலிகேசி.
ராஜாதிராஜரின் கண்கள் அந்தப் போரைப் படம்பிடித்தன. தனது மருமகனின் மீது அவரது மதிப்பு உயரத்தொடங்கியது. அதேநேரம் அநபாயனை நோக்கிப் பாய்ந்து வரும் வேலொன்று அவரது கண்ணுக்குத் தப்பவில்லை .
அந்த வேல் அநபாயனைத் தாக்கி வீழ்த்தவே வருகிறது என்பதனைப் புரிந்துகொண்டு உடனடியாகச் செயல்பட்டார். தனது களிறைச் சற்றே முன் செலுத்தி தன் கைக் கேடயத்தால் சற்றே சாய்ந்து வேலைத் தடுத்து அந்த இலக்கை உடைத்தெறிந்தார். அதேநேரம், சீறிப்பாய்ந்து வந்த அம்பொன்று ராஜாதிராஜரின் மார்பைத் துளைத்து தன் சினத்தைத் தணித்தது.
மருகனை ஆபத்திலிருந்து மீட்டோம் என மகிழும் தருவாயில் இருந்தவரை, அந்த உணர்வு மேலோங்காது தடை செய்து ரத்தம் சிந்த வைத்தது மார்பில் தைத்த அம்பு. அநபாயனின் கண்கள் அம்பாரியில் சரிந்து விழும் மாமன்னரைக் கவனித்தது. சட்டெனத் தன் யானை மீதிருந்து பட்டத்து யானை மீது தாவியேறிய அநபயன், அவரைத் தாங்கிப் பிடித்து, மார்பில் துளைத்த அம்பை அகற்ற ஆயத்தமானான். அதேநேரம் மாமன்னரின் நெஞ்சில் அம்பு துளைத்த செய்தி இளவரசர் ராஜேந்திரனை எட்டவே, தனது புரவியினைத் திருப்பி பட்டத்து யானை அருகில் விரைந்தேகினார் இளவரசர்.
விமர்சனங்கள்
இதுவரை விமர்சனங்கள் எதுவும் இல்லை.