பதினெட்டாம் நூற்றாண்டில்தான் முதன்முதலில் இலக்கியம் கண்ட உருசிய மொழி தனித்து இயங்கவியலாத ஒரு வழிமொழி எனத் தெரிந்திருந்தும், உருசிய மொழியில் பிறமொழிச் சொற்களைத் தேவையின்றி கலந்து எழுதுவதையும் பேசுவதையும் இலெனின் கடுமையாக எதிர்த்தார். ‘உருசிய மொழியைக் கெடுப்பதை நிறுத்துங்கள்! என்னும் தலைப்பில் எழுதிய ஒரு குறுங்கட்டுரையில் இலெனின் இவ்வாறு எழுதினார்:
“நாம் உருசிய மொழியைக் கெடுத்துக்கொண்டிருக்கிறோம். அயல் மொழிச் சொற்களை நம்முடைய மொழியில் தேவையின்றி ஆண்டு வருகிறோம். அயல்மொழிச் சொற்களை ஆளும் போதும் அவற்றைத் தவறாகவே ஆண்டுவருகிறோம். உருசிய மொழியில் Nedochoty, Nedostatki, Probely எனும் சொற்கள் இருக்கையில், அதே பொருளைத் தரும் Defekty எனும் அயல்மொழிச் சொல்லை நம்முடைய மொழியில் ஏன் ஆள வேண்டும்? “…. அண்மையில்தான் நாளேடுகளைப் படிக்கக் கற்றுக்கொண்ட ஒருவர் அவ்வேடுகளை விடாமுயற்சியுடன் படிக்கத் தொடங்கலாம். அதனால், விரும்பியோ விரும்பாமலோ அவர் தாளிகைச் சாயலில் பிறமொழிச் சொற்களைக் கலந்து பேச நேரலாம். இதனால் தாளிகை மொழிதான் கெட்டுப் போகும். அண்மையில்தான் எழுதப் படிக்கத் தெரிந்துகொண்ட அவர் அதை ஒரு புதுமையாகக் கருதி தாமும் அயல் மொழிச் சொற்களை ஆளத் தொடங்குவாராயின், அவரை மன்னித்து விடலாம். ஆனால், அவ்வாறே செய்யும் ஓர் எழுத்தாளரை மன்னிக்கவே முடியாது. அயல்மொழிச் சொற்களைத் தேவையின்றி ஆள்வ தன்மேல் ஒரு போரையே தொடுக்க வேண்டிய நேரம் இதுவன்றோ?” (இலெனின் தொகைநூல் 30, பக்கம் 298).
இதைப் பார்த்தப் பிறகாவது, முதன்மொழியும் இயன்மொழியுமாகிய தமிழில் பிறமொழிச் சொற்களைக் கலந்து எழுதுவது பெரிய தவறென்பது நம்முடைய முற்போக்கு’களின் மண்டையில் ஏறுமோ?
விமர்சனங்கள்
இதுவரை விமர்சனங்கள் எதுவும் இல்லை.