சித்தர் நூல்களில் சிதைவுறாமல் கிடைத்திருப்பவை திருமூலர் நூல்களே என்று துணிந்து கூறலாம். மற்ற நூல்களில் குறை காண்பவர்களும் திருமூலர் திருமந்திரத்தைப் பக்தியுடன் போற்றிப் பணிந்து வணங்குவர். அத்தகைய சிறப்புடையது திருமூலர் திருமந்திரம். திருமூலர் எண்ணாயிரம் திருமந்திரங்களை அருளியதாகக் கூறப்பட்ட போதிலும் திருமூலர் திருமந்திரம் என்ற பெயரில் மூவாயிரம் பாடல்களே வெளியிடப்பட்டுள்ளன. இவை சைவ ஆகமத் திருமுறைகளில் பத்தாவது திருமுறையாகத் தொகுக்கப்பட்டிருப்பது காரணமாகவும் இருக்கலாம். திருமூலர் திருமந்திரம் சைவ சமய நூலாகக் கருதப்பட்ட போதிலும் அது புகட்டும் சமுதாய நீதிகளும், ஒழுக்க நெறிகளும் ஈடு இணையற்றவை. கொல்லாமை, புலால் மறுத்தல், அன்புடைமை கள்ளுண்ணாமை, பிறன் மனை நயவாமை போன்ற உயர்ந்த நெறிகளைப் பற்றியும் அது பேசுகிறது.
“திருமந்திரம்” பாடல்களே ஈடிணையற்றவை. திருவள்ளுவர் குறள் பாடல்களைப் பாடி, காவியத்துறையில் தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இன்றித் தாம் மட்டும் எப்படித் தனிச் சிறப்பு பெற்று விளங்குகிறாரோ அதேபோல் திருமந்திரம் என்றால் திருமூலர் திருமந்திரம்தான் என்று நினைக்கப்படும் அளவுக்கு மிக அழகிய பாடல்களாகப் புனைந்து தனிச்சிறப்பு பெற்று விளங்குகிறார் திருமூலர்.
அப்பாடல்களின் நயமோ? ஒவ்வொன்றும் நெஞ்சை அள்ளிக்கொண்டு போகும் தன்மை படைத்தவை. திருமந்திரத்தை அறியாதவரே மற்ற புலவர்களின் பெருமையைப் பற்றி வானளாவப் பேசுகிறார்கள் என்று கூறவேண்டும். அத்தனை பாடல்களிலும் சைவ சமய நெறியையும் தத்துவங்களையும் திருமூலர் பாடியிருப்பதால் – கதைப் பாடல்களைப் போல் உணர்ச்சிகளைக் கிளறிப் புலவர்களின் நெஞ்சை தன்மை ஈர்க்கும் பெறவில்லையோ என்னவோ?’யாமறியோம்.
விமர்சனங்கள்
இதுவரை விமர்சனங்கள் எதுவும் இல்லை.