நோயற்ற வாழ்வு குறைவற்ற செல்வம் என்ற பழமொழியை நடைமுறையில் கொண்டுவரும் வகையில், வீட்டில் உள்ள நம் பரம்பொருள் பொருட்களைக் கொண்டே அனைத்துவித நோய்களுக்கும் தீர்வு காணும் நோக்கில் இந்த நூல் வெளியிடப்படுகிறது.
வீட்டு வாசலில் முளைத்திருக்கும் கீழாநெல்லி முதல், வீட்டு முற்றத்தின் துளசி தொடங்கி, தோட்டத்தின் காய்கறிகள், அடுப்பறை அஞ்சறைப்பெட்டியின் மிளகு, சீரகம், மஞ்சள் வரை அனைத்துமே மூலிகையாகவும் மருத்துவக் குணங்கள் நிறைந்ததாகவும், அந்த மனிதனுக்கு நோயற்ற வாழ்வு அளிக்கக்கூடிய பாதுகாப்பு அரணாகவும் விளங்குகிறது. உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை ஏற்படும் உபாதைகளையும் அவசியத் தடுக்கும் முறைகளையும் போக்கும் வழிகளையும் எளிய முறையில், அனைவரும் பயனடைந்து ஆரோக்கியம் பெறும் வகையில் எடுத்துரைத்துள்ளார் நூலாசிரியர்.
விரும்பி உண்ணக்கூடிய காய்கறிகளைவிட நாம் ஒதுக்கும் காய்களில்தான் மருத்துவக் குணங்கள் ஏராளம் புதைந்து கிடக்கின்றன. முள்ளங்கி என்றாலே சிறியோர் முதல் பெரியோர் வரை ஓட்டம்தான். ஆனால் அதன் வாசமும் காரலுமே உடல் உறுப்பு நலன் அழியாமல் காத்து, சிறுநீரகத்தை சீரடையச் செய்கிறது. வெண்டைக்காயின் வழவழப்புத் தன்மையினால் உண்ண மறுப்பது அவற்றின் ஆரோக்கியத்தையும் சேர்த்து ஒதுக்குவதாகும்.
காலங்களுக்கு ஏற்ப நோய்களும் மாறுகிறது. எத்தனை புதிய புதியதாக வந்தாலும் அதை, நம் வீட்டில் அன்றாடம் உபயோகப்படுத்தக்கூடிய அஞ்சறைப்பெட்டி பொருட்களைக் கொண்டே சரி செய்யலாம்.
ஆனந்த விகடனில் 1955, 56-ம் ஆண்டுகளில் வீட்டு வைத்தியம் என்ற தலைப்பில் ஒவ்வொரு வாரமும் வெளியான மருத்துவக் குறிப்புகள், வாசகர்களின் பெரும் பாராட்டைப் பெற்றது, பல்வகை நோய் தொடர்பான அனைத்து சந்தேகங்களுக்கும் தீர்வாக அமைந்தது. அந்த மருத்துவக் கட்டுரைகளின் மொத்தத் தொகுப்பு நூல் வடிவில் இப்போது உங்கள் கைகளில்!
எல்லாக் காலங்களுக்கும் பொருந்தும் வகையில் உள்ள இந்த வைத்திய முறைகளை எளிதில் கையாண்டு ஆரோக்கிய வாழ்வு உறுதியாக்கிட, உங்களுக்கு இந்த நூல் வழிகாட்டும்!
விமர்சனங்கள்
இதுவரை விமர்சனங்கள் எதுவும் இல்லை.