தமிழனாய்ப் பிறந்ததற்கு எந்தமிழினத்திற்கு நான் ஆற்ற வேண் டிய கடமை இன்னதென வரையறுத்துக்கொண்டு, முடிந்தவரையில் அதைச் செய்து முடித்துள்ளேன். தமிழரின் மெய்யியல் பள்ளிகளான எண்ணியம் (சாங்கியம்), ஏரணம் (ஞாயம்) என்னும் இரண்டையும் மீட்டுத் தனித்தனி நூல்களாவும், ஆசீவகம், சிறப்பியம் (வைசேடிகம்), எனும் இரண்டையும் வள்ளுவத்தின் வீழ்ச்சி’ எனும் நூலில் விரிவாக வும் தந்துவிட்டேன். ‘தமிழர் மெய்யியல்’ எனும் இந்நூலில் உலகாய்தத்தையும் ஓகத்தையும் தந்திரத்தையும் அருகத்தையும் புத்தத்தையும் இறைபற்று (பத்தி) இயக்கத்தையும் பற்றி எழுதியிருக்கிறேன்.
தமிழருக்கெனத் தனி மெய்யியல் மரபு இல்லையென ஏளனமாகச் சொல்லிவந்த திராவிடமும் இந்தியமும் வெட்கித் தலைகுனியும் வண்ணம், தமிழர் மெய்யியலை மீட்டுக் கொடுத்துள்ளேன். மேலும், வடுகம் எனும் புறப்பகையையும் சாதியும் மதமுமெனும் அகப்பகைகளையும் தமிழரின் வீழ்ச்சிக்குக் காரணமெனத் தமிழர்க்குக் காட்டியிருக்கிறேன். அப்படியிருந்தும், எனக்கு எப்போதும் துணைநிற்போரும் என்னை நேசிப்பவரும்கூட என்னை ஒரு வரலாற்று ஆய்வாளர்’ என்று மட்டுமே அடையாளப்படுத்தும்போது உள்ளுக்குள் சிரித்துக் கொண்டே கடந்துபோவேன்.
Reviews
There are no reviews yet.