தண்ணீர் கொடுக்கும் மகிழ்ச்சியைப் போல, பழங்களைப் பற்றி நினைக்கும் போது அனைவரின் மனதிலும் ஒருவித மகிழ்ச்சி அரும்புவது இயல்பு
உடலுக்கு கேடுவிளைவிக்காமல், தாயைப் போல உடலை வளர்க்கும் பழங்களின் அருமை பெருமைகள் மெய்சிலிர்க்க வைப்பவை.
எண்ணிலடங்கா தாதுக்கள்… வைட்டமின்கள்… நார்ச்சத்து… ஆண்டி-ஆக்ஸிடன்ஸ்… என உணவாகும் மருந்துகளே பழங்கள். மலக்கட்டு முதல் புற்றுநோய் வரை தடுக்கும் வல்லமை பழங்களுக்கு உண்டு.
உலகம் முழுவதும் இருக்கும் ஆய்வாளர்களுக்கு விந்தையாய் இருப்பவை பழங்கள். பழங்களின் உட்பொருட்களைப் பிரித்து மருந்தாக்கும் முயற்சிகளும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே தான் இருக்கின்றன.
இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, நோய் எதிர்ப்புத் தன்மையைத் தூண்ட, இழந்த நீர்த்துவத்தை மீட்டெடுக்க, உடனடியாக பலத்தைக் கொடுக்க என பழங்கள் நமக்காக வழங்கும் பலன்கள் ஆச்சர்யமூட்டக்கூடியவை. முதலுதவி மருந்தாகக் கூட பழங்கள் பயன்படுகின்றன!
’டயட்’ என்றவுடன், அனைவரின் நினைவிற்கும் முதலில் வருவது பழங்கள் தாம். உடல் எடையைக் குறைக்க, உடலுக்கு உற்சாகத்தைக் கொடுக்க அனைவரின் முதல் தேர்வும் பழங்களாகத் தான் இருக்கிறது. இன்றைய டூ-மினிட்ஸ் உணவுகளுக்கு முன்னோடியும் பழங்களே. ’நீரில் அலசவும்… வெட்டவும்… ருசியாக புசிக்கவும்…’ அவ்வளவே, வேலையோ மிக எளிது! டூ-மினிட்ஸ் பழங்கள் ஆரோக்கியமானவை. ஆனால் இன்றைய டூ-மினிட்ஸ் உணவுகளோ ஆரோக்கியமற்றவை என்பதையும் நினைவில் கொள்ளவும்
Palamirukka Bayamen – Dr.Vikram Kumar