இந்திய மெய்யியல் வரலாற்றில் வேதாந்தம் நீங்கலாகப் பிற அனைத்து மெய்யியல்களும் தமிழகத்தில் தோன்றியனவாகவோ, அல்லது தமிழகத்தோடும் – தமிழ் மரபோடும் உறவு கொண்டனவாகவோதான் உள்ளன. “வேதாந்தத்திற்கு அடிப்படையான நான்கு வேதங்கள்கூடத் தென்னகத்தில் தான் தொகுக்கப்பட்டன” எனும் டி.டி கோசாம்பியின் கூற்று உறுதி செய்யப்படுமாயின் வேதாந்தத்திலும் தமிழகத்தின் பங்களிப்பைப் புறக்கணிக்க முடியாது.
‘பதினோறாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மிகச் சிறந்த நகர நாகரிகம் ஒன்று தமிழகத்தின் பூம்புகார் கடற் பகுதியில் மூழ்கிக் கிடக்கின்றது’ எனும் அண்மைக்கால கண்டு பிடிப்பு தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடும் முச்சங்கங்கள் பற்றிய கருத்துகளை உறுதிப்படுத்துகின்றது. இந்நிலையில் தமிழின் பங்களிப்பு இல்லாமல் இந்திய வரலாற்றின் எந்தப் பகுதி முழுமை பெறும்? ஆனாலும் நம் ஆய்வாளர்களின் கவனத்தில் இப்பகுதிகள் இன்றளவும் புறக்கணிக்கப்பட்டே வருகின்றன.
தமிழ் இலக்கியங்களில் பொருள் முதல் கோட்பாடுகளைக் கண்டுணர்ந்து முதன் முதலாக வெளிப்படுத்தியவர் பேராசிரியர் நா. வானமாமலை அவர்கள். அவரின் ஆய்வைத் தொடரும் வகையில் தான் என் ஆய்வுகளை அமைத்துக் கொண்டேன். உலகாய்தம் வெளிவந்த பிறகு சாங்கியம், ஆசீவகம் நோக்கி என் ஆய்வுக்களங்கள் விரிவடைந்தன. இந்திய மெய்யியலின் அடித்தளமாக அமைந்த சாங்கியம், தமிழ் இலக்கிய மரபின் ஊற்றுக் கண்ணாய் விளங்குவதை அறிய முடிந்தது. அவ்ஊற்றுக் கண்ணில் இருந்து கிளைத்த ஓடையே ஆசீவகம் எனும் பேராறாய்ப் பொங்கிப் பரவி பாய்ந்தோடி இந்திய மண்ணை வளப்படுத்தியுள்ளது என்ற உண்மையை இவ் ஆய்வில் கண்டுணர முடிந்தது.
Reviews
There are no reviews yet.