இந்திய சுதந்திரப் போராட்டங்களில், ஆகஸ்ட் புரட்சி எப்படி தனித்ததோர் இடம்பிடித்ததோ அதைப்போல, மொழிப் போராட்ட புரட்சிகளில், தமிழகத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் புரட்சி, வரலாற்றில் இடம்பெற்ற புரட்சியாகும்.
தமிழகத்தில் மொழிப் போராட்டம் மூன்று கட்டங்களாக நடைபெற்றது. 1930-களில் முதல் போராட்டம், 1960-களில் இரண்டாம் கட்டம், 1980-களில் மூன்றாம் கட்டம். இந்த மூன்று கட்ட போராட்டங்களில், பெரும் தாக்கத்தையும் திருப்பத்தையும் ஏற்படுத்தியது, 1963-1965களில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டம்தான்.
இந்தியைக் கட்டாயப் பாடமாக்கக்கூடாது என்று வலியுறுத்தி நடைபெற்ற போராட்டம், ஒருகட்டத்தில் தமிழகம் எங்கும் புரட்சியாக வெடித்தது. துப்பாக்கிச் சூட்டில் மாணவர்கள் பலி, போலீசாருக்கும் மாணவர்களுக்கும் இடையே கலவரம், தீவைப்புச் சம்பவங்கள் என தமிழகம் முழுவதும் அசாதாரண சூழல் நிலவியது. காரணம், தமிழக மாணவர்களிடையே தன்னெழுச்சியாய் எழுந்த தாய்மொழி உணர்வுதான். இந்தப் போராட்டத்தின் விளைவால், தமிழகத்தில் அதுவரை யாராலும் அசைக்க முடியாத இடத்தில் அமர்ந்திருந்த காங்கிரஸ் 1967-ல் ஆட்சியை இழந்தது, தி.மு.க ஆட்சியில் அமர்ந்தது.
தமிழக மாணவர் போராட்டத்தின் வீச்சு, பக்கத்து மாநிலங்களான ஆந்திரா, கேரளா, கர்நாடக மாணவர்களிடையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அப்படிப்பட்ட இந்தி எதிர்ப்பின் தோற்றுவாய் முதல் அனைத்து நிகழ்ச்சிகளையும் சம்பவங்களையும் ஒன்றுவிடாமல் பதிவு செய்திருக்கிறது இந்த நூல். நூலாசிரியர் ஆலடி அருணா, இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்குகொண்டவர் என்பதால் எந்தச் சம்பவத்தையும் விட்டுவிடாமல் பதிவு செய்திருக்கிறார்.
தமிழக வரலாற்றில் தனி இடம் பிடித்துவிட்ட இந்தி எதிர்ப்புப் போராட்டம் பற்றி அறிய விரும்புவோருக்கு இந்த நூல் ஆகச்சிறந்த ஆவணம்.
Reviews
There are no reviews yet.