மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மனோகர் மல்கோங்கர் என்ற ஆசிரியர் எழுதிய “கனோஜி ஆங்கரே-மராத்தா கடற்படைத் தலைவர்” என்ற வரலாற்று நூலைப் படித்தேன். அதில் கனோஜியைப்பற்றிய புதுத் தகவல்கள் பல, புது ஆராய்ச்சிகள் பல இருந்தன. அந்த வரலாற்று நூலே ஒரு கதை போலிருந்தது. அந்த நூல் எனது இதயத்திலிருந்த அந்தப் பழைய ஆசையைக் கிளறவே, மகாராஷ்டிரர்கள் வரலாற்றைப் பற்றிய பல நூல்களைப் படித்தேன். சமீப காலத்தில் வெளிவந்த, ஸர்தேசாய், பிரிஜ்கிஷோர் முதலிய ஆசிரியர்களின் ஆராய்ச்சி நூல்களையும் ஆராய்ந்தேன். பிறகு ஆங்கரே என் இதயத்தில் விசுவரூபம் எடுத்தார். மகாராஷ்டிரர்களின் சுதந்திரப் போராட்டம், அவர்கள் ஸ்தாபித்த பெரும் சாம்ராஜ்யம் அவர்கள் தியாகம், வீரம் அனைத்தும் மனத்தில் உதயமாகவே ஜல தீபமும் உதயமாயிற்று.
மகாராஷ்டிரர்களின் தஞ்சை அரசையும், கொங்கணிப் பகுதியில் நடந்த வீரப் போராட்டங்களையும் இணைத்து இந்த நாவலை எழுதத் தீர்மானித்தேன். இதற்காக நான் படித்த வரலாற்றுப் புத்தகங்கள் பல. செய்த ஆராய்ச்சியும் சொற்பமன்று. மிகுந்த ஆராய்ச்சிக்குப் பின்பு பயன்பட்ட புத்தகங்களின் பட்டியலை இந்த நாவலில் முன்னுரைக்கு அடுத்தபடி தந்திருக்கிறேன். எம்.ஏ., பிஎச்.டி., படிக்கும் மாணவர்களுக்கு உபயோகப்படும் என்ற எண்ணத்தில் இந்த நாவலில் வரும் சரித்திர சம்பவங்களின் தேதிகளையும் தனிப்படக் கொடுத்திருக்கிறேன்.
Reviews
There are no reviews yet.