இலக்கியத்தை அறிந்து கொள்வதற்கான முக்கிய புத்தகம். உலகின் சிறந்த புத்தகங்கள், இலக்கியவாதிகள் பற்றிய ஆழமான கட்டுரைகளின் தொகுப்பு.
நாவல்களின் விதி உண்மையில் புதிரானது. அது எந்த மனிதனால் எப்போது வாங்கப் படுகிறது. எப்போது வாசிக்கப் படுகிறது. அவன் அந்த நாவலை என்ன செய்யப் போகிறான் என்பது எவரும் முன் அறிய முடியாதது. அந்த வகையில் ஒரு புதிரை சுமந்து கொண்டு தான் எல்லா நாவல்களும் உலகில் பிரவேசிக்கின்றன. நாவல் நம்காலத்தின் பிரதான இலக்கியவடிவம். உலகெங்கும் நாவலாசிரியர்கள் கொண்டாடப்படுகிறார்கள். நாவல்கள் உலகின் கவனத்தைத் தன் பக்கம் எளிதாகத் திருப்புகின்றன. செவ்வியல் நாவல்களை மறுவாசிப்பு செய்தும் அறியப்படாத நாவல்களை அறிமுகப்படுத்தியும், எஸ்.ராமகிருஷ்ணன் உயிர்மையில் எழுதிச் செல்லும் காலம் என்ற தொடரை எழுதி அது பரந்த வாசகர் கவனத்தைப் பெற்றது. ஐந்து வருடங்களுக்கு முன்பாக வாக்கியங்களின் சாலை என்ற பெயரில் உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர்களின் புத்தகங்கள் குறித்த அவரது தனி நூல் ஒன்று வெளிவந்தது. இந்த இரண்டையும் ஒன்றிணைத்து அத்தோடு பிரதான இலக்கிய இதழ்களில் உலக இலக்கியம் குறித்து அவர் எழுதிய கட்டுரைகள் யாவும் ஒன்று சேர்க்கப்பட்டு ஒரே நூலாக வெளியாகின்றது.